அரசாங்கப் பாடசாலைகளில் இன்று நான்கு வகுப்புகள் மீண்டும் ஆரம்பம்

மாணவர் காப்புறுதி விபரங்களை பெற்றோர் அறிந்திருப்பது அவசியம்

கொரோனா காரணமாக இழந்த கல்வியை மாணவர்கள் மீளப் பெறுவதற்கு அரசாங்கம் பல வகையான வேலைத் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. அதன்படி அரசாங்க பாடசாலைகளில் மூன்றாம் கட்டமாக இன்று 8ஆம் திகதி தரம் 10, 11, 12, 13ஆகிய வகுப்புகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.

நான்காம் கட்டமாக தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களை எப்போது அழைப்பது என்பது குறித்த முடிவை இன்னும் கல்வியமைச்சு வெளியிடவில்லை. எனினும் அவ்வகுப்புகள் அடுத்த வாரம் ஆரம்பமாகுமெனத் தெரிகின்றது.

இவ்வாறு பாடசாலைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகையில், தமது பிள்ளைகளுக்கு உரிய சுரக்ஷத காப்புறுதி பற்றி பெற்றோர் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். உதாரணமாக கொரோனா தனிமைப்படுத்தல் தொடக்கம் வைத்தியசாலை செலவுக்கும் கூட சுரக்ஷா காப்புறுதி உதவி செய்கிறது.

பாடசாலையில் தரம் 1-_13 வரை கற்கின்ற மாணவர்கள் அனைவரும் சுரக்ஷா காப்புறுதி பெற உரித்துடையவர்கள். மூன்று தொகுதிகளாக இது வழங்கப்படுகிறது.

1.சுகாதார காப்புறுதி, 2.விபத்துக் காப்புறுதி, 3.ஆயுள் காப்புறுதி

பணம் கட்டும் அரச வைத்தியசாலையில் அல்லது தனியார் வைத்தியசாலையில் மாணவர் தங்கி சிகிச்சை பெறும் போது தினமும் ரூபா 12500.00 என்ற அடிப்படையில் 2 இலட்சம் வரை காப்புறுதி வழங்கப்படுகிறது.

பணம் கட்டாத அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது ஒரு இரவுக்கு ரூபா 1000.00 என்ற அடிப்படையில் குறித்த மாணவருக்கு காப்புறுதித் தொகை வழங்கப்படுகிறது.

அதேபோல் குறித்த நோய்க்கான சிகிச்சை இலங்கையில் இல்லாத போது வைத்திய ஆலோசனைப்படி வெளிநாடு செல்வதாக இருந்தால் வெளிநாட்டு சிகிச்சைக்கான செலவும் காப்புறுதியில் குறித்த மாணவனுக்கு வழங்கப்படுகிறது.

வைத்தியசாலையில் தங்காது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு ரூ.10000.00 ஆகும். MRI scan, CT scan, EEG ,DMSA scan, DTPA scan, Ultrasound scan போன்றவற்றை செய்வதற்கு ஏற்படும் செலவுகளையும் காப்புறுதியில் பெற்றுக் கொள்ளலாம்.

பற்களில் இடைவெளி நிரப்புவதற்கு அல்லது அகற்றுவதற்கு ஏற்படக் கூடிய செலவுகளையும் பெறலாம்.

கை,கால் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆயுர்வேத சிகிச்சை பெறினும் அதற்கும் கொடுப்பனவு பெறலாம்.

மூக்குக் கண்ணாடி எடுப்பதற்கும், காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள் அதற்கு உரிய உபகரணத்தை எடுப்பதற்காகவும் காப்புறுதி பணத்தைப் பெறலாம். கடுமையான நோய்களின் போது இருதய சத்திர சிகிச்சை, புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினைகள், தலசீமியா, செயற்கையான கை,கால்கள் கொள்வனவு செய்தல், ஈரல் சம்பந்தமான சத்திர சிகிச்சைகள் போன்றவற்றின் போது இரண்டு லட்சம் முதல் 15 லட்சம் வரை காப்புறுதித் தொகை பெறலாம்.

திடீர் விபத்துக்களின் மூலம் முழுமையாக பாதிக்கப்பட்டு,ஆயுள் முழுதும் அங்கவீன மாணவர்களுக்காக (உதாரணமாக இரண்டு கண்ணும் தெரியாமல் போதல்,இரண்டு காதுகளும் கேட்காமல் போதல்) இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்படுகிறது.

அதேபோல் ஒரு கண் தெரியாமல் போதல் ஒரு காது கேட்காமல் போதல் போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் முதல் 2 இலட்சம் ரூபா வரை காப்புறுதித் தொகை வழங்கப்படுகிறது.,

தாய் அல்லது தந்தை இறக்கின்ற நிலையில் அக்குடும்பத்தின் வருமானம் வருடாந்தம் ரூபா 180000.00 ஐ விட குறைவாக இருந்தால் (வருமானத்தை கிராம சேவகரும்,பிரதேச செய லாளரும் உறுதிப்படுத்த வேண்டும்) பாடசாலையில் கற்கும் ஒரு பிள்ளைக்கு இரண்டு இலட்சம் ரூபா வீதம் மொத்தமாக 6 இலட்சம் வரை காப்புறுதி வழங்கப்படுகிறது. பிள்ளையின் வங்கிக் கணக்கிற்கு தொகை அனுப்பப்படும். பிள்ளையின் மரணத்தின் போது எந்த ஒரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட மாட்டாது.

எந்த ஒரு நிகழ்வின் பின்னும் 90நாட்களுக்குள் இது தொடர்பான அனைத்துப் படிவங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 90 நாட்கள் கடந்த எந்தப் படிவங்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இது போன்ற நிகழ்வுகளின் போது, பாடசாலையிலிருந்து இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று முழுமையாக நிரப்பி, அதில் குறிப்பிடப்படும் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, அதிபர் அத்தாட்சிப் படுத்தியதன் பின்பு அருகிலுள்ள ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் காரியாலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாறாக கோட்டக்கல்வி காரியாலயத்திற்கு அல்லது வலயக் கல்வி காரியாலயத்துக்கு அல்லது கல்வி அமைச்சுக்கு இவற்றை அனுப்பக் கூடாது.