லதா, ஜெயா ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனதேன்?

லதா, ஜெயா ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனதேன்?-MGR Rajini Latha Jayalalitha

- காரணம் எம்.ஜி.ஆரா?

ரஜினி மற்றும் எம்ஜிஆர் இருவரது வாழ்விலுமே 1977 ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. காரணம் எம்ஜிஆர் தான் துவங்கிய அதிமுக கட்சி மூலமாக 144 இடங்கள் கைப்பற்றி முதல் முறையாக தமிழகதின் முதல் அமைச்சர் ஆனார்.

மறுபுறம் அவர்கள் (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), 16 வயதினிலே (1977), முள்ளும் மலரும் (1978), ப்ரியா (1978) என ரஜினி வாழ்வில் முக்கியமான படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன.

1979ல் நினைத்தாலே இனிக்கும் படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன் சினிமா பத்திரிகையாளர் ஜெயமணி என்பவர் ரஜினி தன்னை கொலை செய்ய பார்த்தார், தாக்க வந்தார் என்று புகார் அளிக்க, அது சார்பாக ரஜினி கைது செய்யப்பட்டார்.

ஆனால், இந்த தருணத்தில் ரஜினி நேரடியாக ஆஜராகி தான் கொலை செய்ய முற்படவில்லை என்றும், ஜெயமணி எனும் அந்த நிருபர் தன்னை பற்றி தொடர்ந்து தவறான செய்திகளை எழுதி வருவதாகவும் தெரிவித்தார். தன்னிடம் லைசன்ஸ்இல்லை என்றும் டிரைவர் அன்று வரவில்லை என்பதால் தானே கார் ஓட்டி வந்ததாக சொன்னார்.

அப்போது நடுவழியில் ஜெயமணியை கண்டதும், அவரிடம் பேச சென்றதாகவும் தான் காரில் இருந்து இறங்கியவுடன், அவர் செருப்பை கழற்றி காண்பித்தார். அதனால், ஏற்பட்ட கோபத்தால், அவரை அடிக்க சென்றதாகவும் அவ்வளவு தான். மற்றபடி நான் கொலை முயற்சியில் எல்லாம் ஈடுபடவில்லை என்று ரஜினி கூறி இருந்தார். பிறகு, ரஜினி பிணை மூலம் விடுதலையானர்.

தலைப்பு செய்தியாக வெளிவரும்படி கைதாகி ஜாமீனில் வெளிவந்த ரஜினி, அடுத்த மூன்றே மாதத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இம்முறை நள்ளிரவு விமானம் மூலமாக ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பவிருந்த ரஜினி குடி போதையில் விமான நிலையத்தில் ரகளை செய்த காரணத்தால் கைதானார்.

ஆரம்பத்தில், அவர் நண்பர்கள் தடுத்தும் போதையில் வெளியே கத்தி கூச்சலிட்டார் என்ற காரணத்தால் தனி அறைக்கு விமான நிலைய அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அங்கே கோபத்தின் உச்சிக்கு சென்ற ரஜினி தொடர்ந்து ரகளை செய்த காரணத்தால், ரஜினி பயணம் செய்யவிருந்த பயண சீட்டை ரத்து செய்து, அவர் மீது விமான நிலைய அதிகாரிகள் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இரு கைதுகளுக்கும் பிறகு கூட ரஜினி அந்த காலக்கட்டத்தில் ஒரு மாபெரும் ஸ்டாராக உருவாகிக் கொண்டிருந்தார். அவரை வைத்து இயக்கவும், அவருடன் நடிக்கவும் இயக்குனர்கள், நடிகைகள் அலை மோதினார்கள். அப்போது தான் நடிகை லதா என்பவருடன் நடிக்க ரஜினி விரும்பினார். ஆனால் அந்த சமயத்தில் லதாவுடன் நடிக்க எம்ஜிஆர் போட்ட ஒப்பந்தம் ஒன்று இடையூறாக அமைந்தது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்கும் போதே, நடிகை லதாவுடன் எம்ஜிஆர் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தனர். அதில், எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், வேறு படங்களுக்கு கால் சீட் கொடுக்கும் முன்னர் தங்கள் நிறுவனத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது போல அமைந்திருந்தது அந்த ஒப்பந்தம். இதனால் ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை இழந்தார் நடிகை லதா.

எம்ஜிஆர் காரணமாக ரஜினியுடன் நடிக்கவிருந்த வாய்ப்பை இழந்தவர் லதா மட்டுமல்ல, ஜெயலலிதாவும் தான். ரஜினியுடன் நடிக்க மறுப்பது ஏன் என அன்று பிரபல நாளேட்டில் ரசிகர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு, நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நான் ரஜினியுடன் நடிக்க தயார் தான் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

அதே கேள்வி பதில் பேட்டியில், மற்றுமொரு ரசிகர் எம்ஜிஆருடன் நடிப்பீர்களா? என கேட்டதற்கு... மீண்டும் எம்ஜிஆர் நடிக்க வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று பதில் கூறியிருந்தார்.

மும்பையை சேர்ந்த பத்திரிகை ஒன்று ஜெயலலிதா நடிக்க வாய்ப்புகள் இன்றி தவிக்கிறார் என்று செய்தி ஒன்றை வெளியிட்டது.

இந்த செய்தி கண்டு கோபம் கொண்ட ஜெயலலிதா, தனது கைப்பட ஒரு கடிதத்தை அந்த செய்தி நிறுவனத்திற்கு அனுப்பினார்.

அதில், பில்லா திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்ததாகவும், ஸ்ரீப்ரியா பாத்திரத்தில் என்னை நடிக்க அழைத்தனர். நான் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் அந்த நல்ல வாய்ப்பை ஏன் நான் இழக்க வேண்டும்.

நான் இப்போது நடிப்பில் இருந்து விலகி இருக்கிறேன் என்பது போன்ற பதிலை அனுப்பியிருந்தார்.

இப்படியாக லதா மற்றும் ஜெயலலிதா ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் எம்ஜிஆர் தான் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டன. ஏனெனில், 1980ல் பில்லாவில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த ஜெயலலிதா, அடுத்த வருடமே எம்ஜிஆர் கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக சேர்க்கப்பட்டார்.

முதலமைச்சர் ஆனபிறகும் கூட சினிமாவில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார் எம்ஜிஆர். அப்போதைய இந்திய பிரதமர் மொரார்ஜிக்கு தான் வருமான வரி செலுத்த முதலமைச்சர் ஊதியம் போதாது என்பதால், சினிமாவில் நடிக்க அனுமதி அளிக்க அவருக்கு கடிதம் எழுதி இருந்தாராம் எம்ஜிஆர்.

இப்படி, தான் அரசியலில் முதல் அமைச்சர் ஆனபிறகும் கூட, சினிமாவில் தனது இடத்தை வேறு யாரும் பிடித்து விடக் கூடாது என்பதில் ஆணித்தரமாக இருந்தார் எம்ஜிஆர் என்று சிலர் கூற. அப்படி எல்லாம் எம்ஜிஆர் இருந்தது இல்லை. அவர் அனைவரையும் சமமாக தான் நடத்தினார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இதற்கு உதாரணமாக எம்ஜிஆர் ஆதரவாளர்கள் கூறும் ஒரு நிகழ்வும் இருக்கிறது. எம்ஜிஆரின் விசுவாசியான வீரப்பன் ரஜினியை வைத்து படம் தயாரிக்க அனுமதி கோரிய போது, அவருக்கு உடனடியாக அனுமதி வழங்கியிருந்தார் எம்ஜிஆர் என்ற நிகழ்வை குறிப்பிடுகிறார்கள்.

ரஜினி வளர்ந்து வந்த காலத்தில், அவருக்கும் நடிகை லதாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், அதை விரும்பாத எம்ஜிஆர் ரஜினியை அழைத்து வந்த ஒரு வீட்டில் வைத்து அடித்தார் என்றும் ஒரு செவி வழி செய்தி அந்த காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் ஒப்பந்தம் காரணமாக ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை லதா பிற்காலத்தில் 'ஆயிரம் ஜென்மம்', 'வட்டத்திற்குள் சதுரம்', 'சங்கர், சலீம், சைமன்' போன்ற படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்.