ஊடக அட்டை வைத்திருப்பவர் கைது செய்யப்பட்டால் தகவல் திணைக்களத்திற்கு அறிவிக்கவும்

ஊடக அட்டை வைத்திருப்பவர் கைது செய்யப்பட்டால் தகவல் திணைக்களத்திற்கு அறிவிக்கவும்-If the Media Card Holder is Arrested-Infomr the Information Department-Dullas Alahapperuma

- ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி திட்டம்; 3 மாதங்களில் 3,000 பேருக்கு
- வளமான ஊடக கலாசாரத்தினை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

எதிர்வரும் காலங்களில் ஊடக அடையாள அட்டையினை வைத்துள்ள நபரொருவரை ஏதேனுமொரு குற்றமொன்றுக்கு பொலிஸாரினால் கைது செய்யப்படும் போது அது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினை கட்டாயம் அறிவுறுத்தப்பட வேண்டும் என்பதை பொலிஸ்மாதிபரிடம் தான் தெரிவித்ததாக அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார். 

நேற்று (30) பிற்பகல் வெகுசன ஊடக அமைச்சில் இலங்கை பத்திரிகை ஆசிரியர்களின் சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டே அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

ஊடகத் துறையின் அண்மைக்கால மேம்பாட்டினையும் முன்னேற்றத்தினையும் கவனத்திற் கொண்டு 1973ம் ஆண்டு 05ம் இலக்க பத்திரிகை பேரவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தினை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினர், சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்காக பிறிதொரு பொறிமுறையினை உருவாக்குவது சிறந்தது என தெரிவித்தனர். பத்திரிகை பேரவை சட்டத்தினை திருத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சங்கத்தின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், ஊடகவியலாளர்களை இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைப்பு விடுத்தமை மற்றும் அதனால் குறித்த ஊடகவியலாளர்கள் சங்கடமடைந்த சம்பவமொன்று கடந்த தினமொன்றில் இடம்பெற்றதாகவும், இனி வரும் காலங்களில் அவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெற மாட்டாது எனவும் அமைச்சர் அதன் போது உறுதியளித்தார்.

வளமான ஊடக கலாசாரத்தினை கட்டியெழுப்புவதற்காக ஊடகவியலாளர்களை பலப்படுத்துவதற்கும், ஊடகத்துறையினை பலப்படுத்துவதற்கும் தம்மால் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் தொழில் தகைமையினையும் நிபுணத்துவத்தினையும் விருத்தி செய்வதற்காக ஊடகவியலாளர் உயர் கல்வி நிறுவனமொன்றை நிர்மானிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து, அதன் ஆரம்ப வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள், சட்டத்தரணிகள் உட்பட அனைத்து துறைகளுக்கும் இவ்வாறான உயர் கல்வி நிறுவனங்கள் இருக்கின்ற போதும், ஊடகவியலாளர்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பம் இல்லையென பத்திரிகை சங்கத்தினர் சுட்டிக்காட்டினர். ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களாக மாற்றுவதற்கு அவர்களின் கல்வி தகைமைகளை போன்று சேவைக்காலம், பயிற்சிகள், அனுபவங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதுடன் தீர்மானிக்கின்ற தரத்திற்கு வந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழொன்றினை வழங்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், உயர் ஊடகத்துறை நிறுவனமொன்றை உருவாக்குவது தொடர்பான செயற்பாட்டு குழுவிற்காக பத்திரிகை ஆசிரியர் சங்க பிரதிநிதியொருவரை முன்மொழிவதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

எதிர்காலங்களில் 3,042 பாடசாலைகளுள் இரண்டாயிரம் பாடசாலைகளை இனங்கண்டு ஊடக வட்டங்களை ஸ்தாபித்து இவ்வூடக வட்டத்திற்காக ஊடக அனுசரணையின் வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தினை முறைப்படுத்தி மூன்று மாதங்களிற்குள் சுமார் 3,000 ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதியினை பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் டலஸ் அளகப்பெரும அவர்கள் தெரிவித்தார். 

இயலாமையுடைய பிரஜைகளின் பிரச்சினைகள் தொடர்பில், அவர்கள் தொடர்பான ஊடக பயன்பாட்டின் போது உணர்வுபூர்வமாக செயற்படுமாறும், சிறந்ததொரு ஊடக கலாசாரத்தினை உருவாக்குவதற்காக தம்முடன் கைக்கோர்க்குமாறும் அமைச்சர் பத்திரிகை ஆசிரியர்களிடத்தில் கேட்டுக் கொண்டதுடன் அவர்கள் அதற்கு இணக்கத்தினையும் தெரிவித்தனர்.