கொரோனாவால் உயிரிழப்பவர்களை எரியூட்ட கட்டணம் தேவையில்லை

தவிசாளர் கௌதமன்

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக்கோட்டினை சேர்ந்த நபர்களை எரியூட்டுவதற்கு இனிமேல் கட்டணம் அறவிடப்படாது என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பூந்தோட்டம் மயானத்தில் எரியூட்டப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த எரியூட்டல் செயற்பாட்டிற்கு இதுவரை கட்டணம் அறவிடப்பட்டு வந்தது. இதனால் வறுமை கோட்டிற்குட்பட்ட குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதனையடுத்து இனிவரும் காலங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் சடலங்களை கட்டணம் அறவிடாமல் எரியூட்டுவதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தவகையில் அவர்களது வறுமை நிலையினை உறுதிப்படுத்தும் விதமாக கிராமசேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களின் உறுதிப்படுத்தல் சான்றிதழ்கள் எமக்கு சமர்பிக்கப்படும் பட்சத்தில் அந்த சடலங்களை கட்டணம் இல்லாமல் எரியூட்டுவதற்கான அனுமதியினை மாத்திரம் நாம் வழங்குவோம். ஏனைய விடயங்களை (பிரேதப்பெட்டி) உரிய தரப்பினரே தயார்படுத்திவர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஓமந்தை விஷேட நிருபர்


Add new comment

Or log in with...