CID,TID எனக்கூறி தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் கும்பல்

குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளெனக் கூறி, தொலைபேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் மோசடி தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த மோசடி தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாகவும், அதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், இந்த நபர்கள் அழைப்பை ஏற்படுத்தி தெரிவிப்பதாகவும் இதற்கமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு வருவதற்கான வாகனத்துக்கான செலவை வைப்பிலிட வேண்டுமென இம் மோசடியாளர்கள் கோருகின்றனர்.

இல்லாவிடின், அந்த நபர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு வருகை தரவேண்டுமென்றும் மோசடியாளர்கள் தெரிவிப்பதாக பொலிஸ்,ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஏமாற வேண்டாமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...