நாளொன்றுக்கு 20கிலோ பச்சைத்தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதியின் பொகவான சந்தியிலேயே நேற்று காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்ததாவது..
இதுவரை காலமும் 15கிலோ பச்சைத்தேயிலை பறித்தோம். ஆனால் 1000ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20கிலோ பச்சைக்கொழுந்து நாளொன்று பறிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்கின்றது. அவ்வாறு 20கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் வாரத்தில் 03நாட்களே வேலை வழங்கப்படும் என அச்சுறுத்தலும் விடுக்கின்றது. இதுவரை வழங்கி வந்த சுகாதாரம் சம்பந்தமான சலுகைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதோடு அத்தியாவசிய விலை உயர்ரவினாலே ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வை கோரினோம். ஆனால் இப்போது பச்சைக்கொழுந்து அதிகளவில் பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகங்கள் அழுத்தம் கொடுக்கின்றது, ஆகவே நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், தொழிலமைச்சர் மற்றும் மலையக பிரதிநிதிகள் தோட்ட கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடன் தொடர்பு கொண்டு கேட்ட போது தற்போது தேயிலை கொழுந்து அதிகளவில் காணப்படுகிறது. ஆகவே தான் கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்க கோரினேன். தேயிலை செடிகளில் வளர்ந்திருக்கும் பச்சைக்கொழுந்தினை வீணாக வெட்டி வீச முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 300தொழிலாளர்கள் வரை இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கலைந்து சென்றனர் .
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
Add new comment