எண்ணெய் தேய்த்தால் முடி உதிருமா?

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.

இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இருக்கிறது? அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. தலைக்கு குளித்தோமா, ஹேர் ட்ரைய​ர் மூலம் கூந்தலை உலர வைத்தோமா அத்தோடு நமது வேலை முடிந்தது என்று பலர் இருக்கின்றனர்.

இன்றைய காலத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை காண்பதே அரிதாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை.

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.

கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது மிகவும் நல்லது. அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கல்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும்.

அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.

கூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டு விட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும். தலையின் சருமமானது இயற்கையாகவே, தலையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக ஒருவித எண்ணெய் பசையை உற்பத்தி செய்யக்கூடியது.

ஆனால், நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப்படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும். தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும்.

பெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக் கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர்.

இது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கல்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிரும். தலைக்கு தேய்க்கும் எண்ணெய் வேர்களால் உறிஞ்சப்பட்டு, கூந்தலை மிருதுவாக்க வேண்டுமென்றால், எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டாமல் இலேசாக விட்டு விடுங்கள்.

இவ்வாறு செய்வதால் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச் சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கும்.


Add new comment

Or log in with...