வெறுப்புப் பேச்சினை எதிர்த்து ஒருநாள் பேஸ்புக் புறக்கணிப்பு

கிம் கார்டேஷியன், லியோனார்டோ டி காப்ரியோ, மைக்கல் டீ. ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் நேற்று தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவுகளை இடுவதை புறக்கணித்தனர்.

சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர்.

வெறுப்புப் பேச்சை நிறுத்தும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் பதிவிடப் போவதில்லை என்று பிரபலங்கள் தெரிவித்திருந்தனர்.

“அமெரிக்காவில் வேண்டுமென்றே பிளவை ஏற்படுத்துவதற்குப் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றைச் சில குழுக்கள் பரப்புவதைத் தளங்கள் அனுமதிக்கின்றன. ஒன்றும் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று 188 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களைக் கொண்ட கார்டேஷியன் கூறினார்.

பாகுபாடு, பகைமை, வன்முறை ஆகியவற்றை ஏற்படுத்தும் தகவல் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆர்வலர்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி அளித்து வருகின்றனர்.

பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன.


Add new comment

Or log in with...