மரியன்னையின் விண்ணேற்புத் திருநாளில்; மடுத் திருப்பதியில் ஆவணி திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க மடுத் திருப்பதியில் மடுமாதா திருவிழா எதிர்வரும் 15ஆம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

மடு திருப்பதி புனித மரியாளின் பெயரில் இலங்கையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஒரு திருத்தலமாகும். அந்த வகையில் மரியன்னை விண்ணேற்றமடைந்த திருநாளில் பிரதி வருடமும் இத்திருவிழாகொண்டாடப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

திருவிழா திருப்பலி எதிர்வரும் 15ஆம் திகதி 6.15மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் நிறைவேற்றப்படவுள்ளது.

நாட்டின் ஏனைய மறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள், குருக்கள் ஆகியோரின் பங்கேற்புடன் திருவிழாக் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது.

திருவிழா நிகழ்வுகள் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ். ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் கடந்த 6ம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ம் திகதி காலைதிருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

மடு திருப்பதி சுமார் 400ஆண்டுகளுக்குமேல் பழமையான திருத்தலமாகும். தமிழ் சிங்கள மக்களின் விசுவாசத்திற்கு உரிய வழிபாட்டுத்தலமாக இது திகழ்கிறது.வருடா வருடம் நாட்டின்பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் மடு திருவிழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.

திருவிழா திருப்பலியில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் கலந்து கொள்வர். எனினும் கடந்த வருடம் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், இந்த வருடம் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஆபத்து மத்தியிலும்  சுகாதாரத் துறையினரின்அறிவுறுத்தல்களுக்கு அமைய இம்முறையும் மடு ஆவணித்திருவிழா நடைபெறுகின்றது. 

மடுத்திருப்பதியின் வரலாறு:

ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலப்பகுதியோடுதான் மடுத்திருப்பதியின் வரலாறும் ஆரம்பமாகின்றது.மன்னாரில் இருந்து 10கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் மாந்தை என்ற கிராமத்தின்ஆலயம்தான் மடு மாதா திருச்சுருபத்தின் ஆதி இருப்பிடமாகும். ‘செபமாலைமாதா’ என்றுஅழைக்கப்பட்ட அந்தத் திருச்சுருபம்தான் இன்றைய மடுமாதா. 

ஒல்லாந்தருடைய ஆட்சியில் கத்தோலிக்கருக்கு எதிராகக் கொடூரமான வேத கலாபனை ஆரம்பித்தது. இந்தக் கலாபனையில் இருந்து தங்களைக் காப்பாற்றும் பொருட்டும் செபமாலை மாதாவின் திருச் சுருபத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் மாந்தை மக்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

குருக்களின் துணையில்லாத அந்த வேளையிலும் மாந்தையில் இருந்த 20பக்தியுள்ள குடும்பங்கள் செபமாலை மாதாவின் திருச்சுருபத்தைத் தூக்கிக்கொண்டு அடர்ந்த வன்னிக் காட்டினுள் புகுந்தனர். திசை தெரியாது அங்கும் இங்கும் அலைந்தனர். இறுதியாக ‘மருதமடு’ என்ற இடத்திற்கு எவ்வித ஆபத்தும் இன்றி மாதாவின் வழி நடத்தலோடு வந்து சேர்ந்தார்கள். 

இவ்வேளையில் யாழ்ப்பாண நகரில் ஒல்லாந்தருடைய வேதகலாபனை தொடர்ந்து கொண்டிருந்தது. எழுநூறு கிறிஸ்தவர்கள் மட்டில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்காட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் பூநகரியைக் கடந்து, பயத்தோடும் பதட்டத்தோடும் அடர்ந்த காட்டினுள் அலைந்து கொண்டிருந்தார்கள்.ஏற்கனவே அங்கு வந்திருந்த மாந்தைக் கிறிஸ்தவர்களோடு இவர்களும் சேர்ந்து அன்னையின்அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்கள்.  யாழ்ப்பாணத்திலிந்து தப்பிவந்தவர்களில் போர்த்துக்கேய தளகர்த்தனின் மகளாகிய ‘எலேனா’என்பவளும் ஒருவர். இவள்தான் முதன் முதலில் மடு அன்னைக்கு சிறிய ஆலயம் அமைத்தாள். இவளுடைய  அந்த நற்செயலுக்காக கிறிஸ்தவர்கள் இந்த இடத்தை ‘சிலேனாமருதமடு’ என்று அழைத்தார்கள். அந்த இடம்தான் இன்றைய மடுத்திருப்பதி.

மடுத்திருப்பதியின்அற்புத ஆற்றல் உலகறிந்த விடயமாகும். மடு அன்னையின் பரிந்துரையால் பல அற்புதங்கள்நடைபெறுகின்றன. அதனால்தான் இப்பதி நோக்கி மக்கள் இலட்சக்கணக்காக கூடுகின்றனர்.

பொன் விளையும் பூமி என்பது போல் மடு அன்னையின் திருப்பதியில் உள்ள மண்கூட மருந்தாகத்திகழ்கின்றது. அந்த மண்அருள் நிறைந்த மண்! ஆற்றல் நிறைந்த மண்! இத் திருத்தல மண்ணுக்கு சிறப்பான பெருமை உண்டு.உலகின் எங்குமே இல்லாத நிலையில் திருத்தலத்திலிருந்து பெறப்படும் மண் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது.   இத்திருப்பதியின் வளாகத்திலிருந்து பெறப்படும் மண்ஆசீர்வதிக்கப்பட்டு பிரதான ஆலயத்தின் ஒரு மூலையில் அதற்கென அமைக்கப்பட்ட ஒருதொட்டியில் வைக்கப்படுகின்றது. இந்த மண்ணை மக்கள் தம் வீடுகளுக்கு எடுத்துச்செல்கின்றார்கள்.

குணமளிக்கும் மருந்தாக இந்த மண்ணைப் பயன்படுத்துகின்றார்கள். ‘கோயில்மருந்து’ என்று இதுஅழைக்கப்படுகின்றது.   மடுத்திருப்பதியின் புனிதத்திற்கும் அருள்வளத்திற்கும் சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாக  ‘கோயில்மருந்து’ என்றுஅழைக்கப்படும் இந்த மடு மண் அன்று தொடக்கம் இன்று வரை திகழ்கின்றது. பாம்பு தீண்டியநிலையில் இங்கு கொண்டுவரப்படும் மக்கள் இப்பதியை அடைந்ததும் குணம் பெறுகின்றார்கள்என்பதும் மக்களின் ஆழமான விசுவாசமாகும். “கருணைமழை பொழியும் கானகச் செல்வி” என மடுஅன்னை அழைக்கப்படுகின்றாள்.  குறைவுபடாததாயன்புக்கு இலக்கணமாக இவள் விளங்குகின்றாள். துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள்மத்தியில் மக்கள் ஆறுதல் தேடித் தஞ்சமடையும் தாயாக மடு அன்னை விளங்குகின்றாள்.    தாயன்பு - அது தனி அன்பு அது தனித்துவமான அன்பும்கூட.அம்மை அப்பனாக விளங்கும் இறைவனுடைய தாயன்பை திருவிவிலியம் தெளிவாகச் சொல்கிறது. “நீங்கள்மார்பில் அணைக்கப்படுவீர்கள். மடியில் வைத்துச் சீராட்டப்படுவீர்கள். ஒரு தாய் தன்குழந்தையைத் தேற்றுவதுபோல நானும் உங்களைத் தேற்றுவேன்.” இறைதந்தையின் இத்தகைய அன்பையே மடு அன்னையும் பிரதிபலிக்கின்றாள்.

“பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்” என்று நம் ஆண்டவர் இயேசு கூறியதற்கிணங்கஆண்டவன் இயேசுவின் தாயல்லவா நம் மடு அன்னை! தனயனின் அதே வார்த்தைகளை தாயும் கூறிஅழைக்கின்றாள். அந்த அன்னையின் அருகில் இருக்க, அவளது பாதத்தில் அமர்ந்து தம்குறைகளைச் சொல்ல, அவளது தாயன்பில் திழைத்திருக்க அவளது பிள்ளைகள் இலங்கையின் நாலாதிசைகளில் இருந்தும் வந்து குவிகின்றார்கள். அன்னையிடமிருந்து ஆறுதலையும் தேறுதலையும்பெறுகின்றார்கள்.    மடுத்திருப்பதி ஒ ற்றுமையினதும் ஒன்றிப்பினதும்மத்திய நிலையமாகத் திகழ்கின்றது. எக் குலத்தவராயினும், எம்மொழியினராயினும்,எவ்வினத்தவராயினும் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்ற உணர்வுடன் இத்திருப்பதி அனைத்துமக்களையும் வரவேற்கின்றது. 

இத் திருப்பதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள மடுஅன்னையின் திருச்சுருபம் ‘வரவேற்புமாதா’ என்றுஅழைக்கப்படுகின்றது. மடு அன்னை இரு கரங்களையும் விரித்தவளாய் தன் திருப்பதி நோக்கி வரும்அனைவரையும் தன் கைகளை நீட்டி அழைக்கும் தோற்றத்தோடு விளங்குவது கண்ணுக்கினியகாட்சியாகும். மக்கள் மத்தியில் மன்னிப்பு, ஒப்புரவு, சமாதானம் போன்ற உயர்ந்த விழுமியங்களை ஏற்படுத்துவற்கு அவர்கள் ஒன்றுசேரக்கூடிய ஒரே இடம் இந்த நாட்டில் மடுத் திருப்பதிதான். 

கன்னி மரியாள் களங்கமற்ற நீர்ச்சுனை. இறைமகனையே தன் உதரத்தில் சுமந்ததிருப்பேழை. கடவுளையே தாங்கி நின்ற பதிர்ப்பாத்திரம். ஆன்மாவோடும் உடலோடும்விண்ணேற்றமடைந்த அன்னை மரியாவுக்கு மடுப்பதியில் பெருவிழா. அலகையை வென்று அகிலத்தைக் காத்த அந்த அன்னைக்குஇறைவன் அளித்த அன்புப்பரிசு அவரை விண்ணகத்திற்கு அழைத்துக்கொண்டது. தாய் விண்ணேறிச் சென்றால் சேய்கள் நமக்கெல்லாம் அது பெருவிழாதானே! அதனால்தான் மடுத்திருப்பதிவிழாக்கோலம் பூண்டு மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிகின்றது. “மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே” என்ற கான வரிகள் காற்றில் என்றும் கலக்கட்டும். அதன் வழி மருதமடுத் தாயின் புகழ் என்றும் நிலைக்கட்டும்.    

அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்


Add new comment

Or log in with...