மாணவர்களின் அச்சத்தை போக்கவே ஒரு வாரகாலம் பாடசாலை விடுமுறை

கொரோனா 02 ஆவது அலை வரவுள்ளதாக மாணவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் வகையில் சில தரப்பினர் செயற்பட்டதால் மாணவர்களின் பயம் நீங்குவதற்காகவே பாடசாலைகளுக்கு ஒருவார கால விடுமுறை வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  

பல்வேறு பிரதேசங்களிலும் மாணவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு தயாரான நிலையிலேயே ஒருவார கால பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  

எனினும் பல்கலைக்கழகங்களுக்கு எந்த விடுமுறையும் வழங்கப்படவில்லை.  

ஏனெனில் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு பரீட்சை நடைபெறுவதை கருத்திற்கொண்டு தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று கொத்தணி மட்டத்திலேயே இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த வாரம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமைபோல் நடைபெறும் என்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  


Add new comment

Or log in with...