மலையகத்தின் எதிர்காலத்துக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தனி ஒருவராக மலையகத்தில் எவ்வாறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தாரோ அவ்வாறே நானும் அவரோடு இணைந்து மலையகத்தின் எதிர்காலத்துக்கு என்ன  என்ன அபிவிருத்திகள் அவசியமோ அதற்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பத்தனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமது தலைவர் பழனி திகாம்பரம் வெற்றிபெற்று மலையகத்தின் வீடமைப்புத்திட்டங்களையும், வீதி அபிவிருத்தியையும் முன்னெடுத்து செல்வார்.

நான் அவரோடு இணைந்து மலையக மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, விளையாட்டுத்துறை விருத்தி, வேலை வாய்ப்பு, சுயதொழில் போன்ற அபிவிருத்திகளை கட்டாயம் முன்னெடுப்பேன்.

நீங்கள் எங்களுடன் இருக்கும்வரை உங்களுக்கு என்னென்ன தேவையென அறிந்து நிச்சயம் செய்து கொடுப்பேன். இது தேர்தல் காலம் என்பதால் பலர் வருவார்கள். பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.  அதை செய்துதருகிறோம், இதை செய்து தருகிறோம் என்றெல்லாம் பேசுவார்கள். அவற்றை கேட்டு மக்கள் ஏமாறக் கூடாது.

நாங்கள் கடந்த காலங்களில் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். வீடுகளை அமைத்து கொடுத்துள்ளோம். காபட் வீதிகளை தோட்டங்களுக்கு கொண்டு வந்துள்ளோம். பிரதேச சபைகளை அபிவிருத்தி செய்துள்ளோம்.

விளையாட்டுத்துறையை விருத்தி செய்துள்ளோம். கல்விக்காக உதவி செய்துள்ளோம். குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

நான்கரை வருட காலப்பகுதியில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை செய்து காட்டிவிட்டுதான் மக்களிடம் வாக்கு கேட்கிறோம். வெறுமனே ஒன்றும் செய்யமால் வாக்குறுதிகளை மாத்திரம் பெற்றுக்கொடுத்துவிட்டு வாக்குகளை கேட்கவில்லை ஏன்றார்.

ஹட்டன் விசேட நிருபர்


Add new comment

Or log in with...