புகைப்படம் எடுக்கச் சென்றவர் நீரில் மூழ்கி மாயம்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்கச் சென்ற திருமணமாகவிருந்த ஜோடி  தவறி வீழ்ந்த நிலையில், மணமகன் காணாமல் போயுள்ளார்.

மணமகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக, லக்கல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) பிற்பகல், லக்கல பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான நக்கிள்ஸ் மலைத்தொடர் பிரதேசத்திலுள்ள சேர எல்ல நீர்வீழ்ச்சியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர், குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவராவர்.

எதிர்வரும் மாதம் திருமணம் புரியவுள்ள இவர்கள், தமது பெற்றோருடன், குருணாகல் பிரதேசத்திலிருந்து லக்கல ரிவஸ்டன், நக்கிள்ஸ் போன்ற பிரதேசங்களில் புகைப்படம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.

ரிவஸ்டன் பிரதேசத்திலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இலுக்குபுர, சேர எல்ல நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க இவர்கள் முயற்சித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென்று குறித்த இளைஞரும் யுவதியும் நீரில் வழுக்கி வீழ்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மணமகள், அங்கு வந்தவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காணாமல் போன குறித்த இளைஞர் இதுவரையில் மீட்கப்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன இளைஞரை தேடிக் கண்டுபிடிக்க கடற்படையினரின் சுழியோடி பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...