மிலேனியம் சவால்கள் திட்டம் (MCC-மிலேனியம் செலேஞ்ச் கோப்பரேஷன்) தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆரம்ப அறிக்கை இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
2019 டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின்படி ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் MCC தொடர்பில் ஆராய நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் இக்குழுவின் தலைவராக கடமையாற்றுகின்றார். போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி டி.எஸ். ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் பட்டய கட்டடக் கலைஞர் நாலக்க ஜயவீர ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
இக்குழுவிடமிருந்து, சுயாதீன தொழில்வாண்மை பகுப்பாய்வொன்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியதான விரிவானதொரு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆவணங்களை ஆராய்தல், பல்வேறு தரப்புகள், குழுக்கள் மற்றும் தனிநபர்களுடன் கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகளில் பங்குபற்றி தகவல்களை திரட்டுவதற்கும் இக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் குறித்து முழுமையான அறிக்கை 04 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Add new comment