கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு, தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து நவநாட்கள் நடைபெற்று, எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி காலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த இந்தத் தேவாலயம் தனது 400ஆவது ஆண்டு பெருவிழாவை இந்த வருடம் சிறப்பாக கொண்டாடுவதுடன், 400ஆவது ஆண்டு நிறைவையிட்டு தேவாலய பங்குத்தந்தை ஜூலியன் பிரான்சிஸ் தலைமையில் கொடியேற்ற திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி இரண்டாம் திகதி காலை தேவாலயத்தின் 9 வட்டாரங்களைச் சேர்ந்த 400 சிறுவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்கப்படவுள்ளதுடன், மறுநாள் மூன்றாம் திகதி மாலை இந்த வருடத்துக்கான திருவிழாவின் வட்டாரச்சுற்று பிரகார ஊர்வலம் தேவலாய பங்கு மக்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்