அரசியல் கருத்து வேறுபாடுகள் விவாதங்களுடன் மட்டும் மட்டுப்பட்டதாக இருக்க வேண்டுமெனவும்,
அரச ஊழியர்களின் ஒத்துழைப்புக்களாலேயே,
வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமென்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். “புதியதோர் கிராமம் – புதியதோர் நாடு” ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தி திட்டத்தின் பொலன்னறுவை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டும் துறைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இக்கூட்டம் நடத்தப்பட்டது. பொலன்னறுவை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கடந்த (29) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் : இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
மிகுந்த நம்பிக்கையுடன் நாம், நாட்டை கட்டியெழுப்பினோம்.இதனால்,இன்று நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. பொருளாதாரத்தில் வீழ்ந்த நேரம், உலக நாடுகள் எங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தின. வங்கிக் கொடுக்கல் வாங்கலும் நிறுத்தப்பட்டன. கடினமான காலங்களில் நம்பிக்கையை மீட்டெடுத்து,நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.கிரேக்கத்திற்கு என்ன நடந்தது? பொருளாதார வீழ்ச்சிக்கு அந்நாடு,முகம்கொடுத்தது.
அரச ஊழியர்கள் குறைக்கப்பட்டனர். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன், சம்பளமும் வழங்கப்படுகிறது. நாட்டின் உற்பத்தியைப் பெருக்கி உபரியானளவு விளைச்சலை கொண்டுவர விவசாயிகள் எமக்குப் பெரும் பலமாக விளங்கினர்.
இந்த நாடும் உலகமும் எங்களை நம்பின. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாடு முன்னேற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் விவாதங்களுடன் மட்டும் மட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். அரச ஊழியர்கள் என்ற வகையில் மிகுந்த கடமையும் பொறுப்பும் அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.