மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 2,482 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்த ஏற்பாடுகளை பயன்படுத்தி மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த, 06 பிரதான திட்டங்களின் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இவ்வருடம் பெரிய கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 292 மில்லியன் ரூபாவாகும்.
இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன், உள்ளூர் நிதியுடன் கொழும்பில் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட பணத்தில், நொரிஸ் கால்வாய் உப திட்டத்தின் மீதமுள்ள பணிகளும், ஒருங்கிணைந்த மழை நீர் முகாமைத்துவ அமைப்பின் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் அம்பத்தளை நீரேற்று நிலையம், மாதிவெல கிழக்கு வளைவு, டொரிங்டன் சுரங்கப்பாதை அபிவிருத்தி உள்ளிட்ட 54 உப திட்டங்கள், கடந்த வருடம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.