ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒற்றுமையாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். சிவில் அமைப்புக்களுடனும், தமிழரசுக் கட்சியுடனும் இது தொடர்பில் பேசுவோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சியுடனும் பேசுவதற்கு முயற்சிப்போமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் ரெலோ அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி வவுனியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நில அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நாம் அவருடன் பேசியிருந்தோம். இன்னும் பல விடயங்களை பேசியிருந்தோம். நாம் கூறும் விடயங்கள் உடனடியாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. நாங்கள் கேட்ட விடயங்களுக்கு சரியான பதிலை அவர் தரவில்லை. சம்பிரதாய பூர்வமான ஒரு கூட்டமாகவே இது நடைபெற்றது. பல அபிவிருத்திகள் அறிவிக்கப்பட்டாலுங்கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதி வந்துசென்ற பின்னர் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இராணுவமுகாம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அது என்ன தேவைக்காக அமைக்கப்பட்டது என்ற விடயம் தெரியவில்லை. எமது மக்களை அச்சுறுத்துவதற்கான செயற்பாடே அது.
வவுனியா விசேட நிருபர்