இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம்பெறும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ,பாராளுமன்ற உறுப்பினருமான
எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் நேற்று (18) அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
யாப்பின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மாநாடு நடைபெற இருப்பதினால் விழா குழுவாக திருகோணமலை மாவட்ட கிளை செயற்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்ய உள்ளதாகவும், 26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூட உள்ளதாகவும் 27ஆம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளத்துடன் 28 ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதாகவும் பிரதேச ரீதியாக பிரதிநிதித்துவத்தை கூட்டுவது எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் திருகோணமதையை பொறுத்தவரை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சொன்ன சில கருத்துக்களுக்கு அமைவாக மேலதிகமாக ஆறு உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பும் பொறுப்பு மாவட்ட கிளைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதன் போது சுட்டிக்காட்டினார்.
ரொட்டவெவ குறூப் நிருபர் – அப்துல்சலாம் யாசீம்