தெற்கு காசாவில் உள்ள சிறு நகரான அல் மவாசியின் ஒரு பகுதியை பாதுகாப்பான இடம் என்று அறிவித்திருக்கும் இஸ்ரேல் பலஸ்தீனர்களை அங்கு செல்லும்படி கூறியுள்ளது.
வடக்கு காசாவை அடுத்து தெற்கு மீது இஸ்ரேல் சராமாரி குண்டு வீசிவரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பாதுகாப்பு பகுதி போரினால் வெளியேற்றப்பட்டுள்ள 1.8 மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்களுக்கு இடவசதி அளிக்கப் போதுமானதா? என்று கேள்வி எழுந்துள்ளது.
பழங்குடி மக்களின் கரையோர நகரான அல் மவாசி சுமார் 1 கி.மீ. அகலம் மற்றும் 14 கி.மீ. நீளமான குறுகலான மற்றும் சிறிய நிலப்பகுதியாகும்.
இதில் வெளியேற்றப்பட்டவர்கள் அடைக்கலம் பெற வேண்டிய பகுதியாக இஸ்ரேல் அறிவித்திருப்பது அந்த நகரில் வெறிச்சோடிய, மணல் திட்டான வெறுமனே 6.5 சதுர கிலோமீற்றர் இடமாகும்.
இது லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தின் அளவானதாகும். இந்த விமானநிலையத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 167,000 பேர் வருகை தருகின்றனர். அதன்படி ஹீத்ரூ விமானநியைத்தை விட 20 மடங்குக்கு மேற்பட்ட மக்களுக்கு இந்தப் பகுதியில் அடைக்கலம் வழங்க வேண்டி உள்ளது.
எனவே இந்தப் பகுதி பெரும் எண்ணிக்கையான இடம்பெயர்ந்த மக்களுக்கு இட வசதி அளிக்க போதுமானது அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“காசா ஏற்கனவே சனநெரிசல் மிக்க பகுதியாக இருக்கும் நிலையில் விமான நிலையம் ஒன்றுக்குள் சுமார் 1.8 மில்லியன் மக்களை உள்ளடக்குவது பற்றி நாம் பேசுகிறோம்” என்று ரமல்லாவை தளமாகக் கொண்ட சட்ட நிபுணர் புஷ்ரா காலிதி தெரிவித்துள்ளார்.
சன நெரிசல் மிக்க இடத்தில் வாந்திபேதி, இரைப்பைக் குடலழற்சி போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைச்சின் தலைவர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.