ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது வீசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
பலஸ்தீனர்கள் பலரும் தமது சொந்த நிலத்தில் இருந்து துரத்தப்பட்டுள்ள குடியேற்றவாசிகளின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்து ஒருநாள் கழித்து இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று முன்தினம் (05) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு அது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மூத்த அதிகாரிகள் எச்சரித்து வந்தனர்.
தனிப்பட்ட வீசா தடை குறித்து பிளிங்கன் கூறாதபோதும், செவ்வாய்க்கிழமை தொடக்கம் அமுல்படுத்தப்படும் இந்தத் தடையில் பல டஜன் குடியேற்றவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளடக்கப்படுவார்கள் என்று இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.