வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் 14 வயது மகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தைக்கு இன்று (30) கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
தந்தை மகளை தகாத முறைக்கு உட்படுத்தியமையினால் மகளுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இந்நிலையில், தந்தைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த சம்பவம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றுள்ளது. தாய் வெளிநாடு சென்றிருந்த நிலையில் மூன்று தடவைகள் தந்தையினால் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட, 14 வயது மகளான சிறுமி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து மரபனு பரிசோதனையின் போது சிறுமியின் தந்தையே பிறந்த ஆண் குழந்தைக்கு தந்தையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரச சட்டதரணி தர்சிகா திருக்குமரநாதன் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, குறித்த நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை, ரூ.30,000 தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளதோடு, கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத கால கடூழிய சிறை மற்றும் ரூ.6 இலட்சம் நட்ட ஈடும், அதனை கட்டத்தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியா விசேட நிருபர்