இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் அறிக்கைகளைப் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலைதீவு அரசாங்கம் இடைநிறுத்திய சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நீடித்து வருகிறது.
அமைச்சர்களான மல்ஷா ஷெரிப், மரியம் ஷியூனா, அப்துல்லா மஹ்சூம் மஜிட் ஆகிய மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டனர்.
இந்திய பிரதமர் லட்சதீவுக்கு விஜயம் மேற்கொண்டமை குறித்து கேலி செய்யும் வகையில் அறிக்கை வெளியிட்டமையின் அடிப்படையில் இவர்களை மாலைதீவு இடைநிறுத்தியது.
அமைச்சர் மரியம் ஷியூனா உள்ளிட்டவர்கள் இந்திய பிரதமர் லட்சதீவுக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல என்று குறிப்பிட்டுள்ள மாலைதீவு அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது.
இதேவேளை மாலைதீவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி சபாநாயகருமான ஈவா அப்துல்லா, பிரதமர் மோடிக்கு எதிராக எம்.பிக்களில் ஒரு பிரிவினர் தரக்குறைவான கருத்துகளைத் தெரிவித்துள்ளதால் அரசாங்கம் இந்திய மக்களிடம் முறைப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுள்ளார்.