பேரழிவைத் தடுப்பதற்கும், பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமென காசாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கான உலகளாவிய அழைப்புகளை இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கவுன்சில் இங்கிலாந்து (காஸ்மோஸ் – இங்கிலாந்து) வலுவாக ஆதரிக்கிறது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இலங்கை முஸ்லிம் அமைப்புகளுக்கான குடை அமைப்பான COSMOS – UK, கண்மூடித்தனமான பொதுமக்களின் உயிர் இழப்பு மற்றும் மனிதாபிமான பேரழிவைத் தவிர்ப்பதற்காக காசாவில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அவசரமாக அழைப்பு விடுக்கிறது.
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள கண்மூடித்தனமான மற்றும் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில் அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிர்வாழ்வதற்காக போராடி வருகின்றனர். இதன் விளைவாக 5,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள், 3,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 201 மருத்துவ பணியாளர்கள் உட்பட உயிரிழப்பு எண்ணிக்கை 14,100 ஐத் தாண்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனிதாபிமான நெருக்கடி அதிகரித்துள்ளது. ஒரு முழு சமூகமும் முற்றுகையிடப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றது.
உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்களை நாடுவது மறுக்கப்படுகிறது. அம்மக்களின் வீடுகள், தங்குமிடங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் குண்டுவீசப்படுகிறது. ஐ.நா. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒக்டோபர் 7 இற்குப் பிறகு, குறிப்பாக காசாவில் பலஸ்தீனியர்களுக்கு எதிரான மீறல்கள் மிக மோசமாக உள்ளன.
காசா மக்கள் மீதான மீறல்கள் மற்றும் அவலங்கள் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான மௌனத்தை காஸ்மோஸ் மிகுந்த கவலையுடன் நோக்குகிறது. வன்முறை நீங்க வேண்டும். குற்றம் இழைத்தோர் அதற்கான பொறுப்புக்கூற வேண்டும் என்று COSMOS மீண்டும் வலியுறுத்துகிறது. பலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் அநீதி சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக, பல தலைமுறைகளாக நீடித்து, பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியும் அதைத் தொடரவிட முடியாது.
எனவே, COSMOS UK, உடனடி நடவடிக்கையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், அவசரமாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கும், தேவைப்படும் அனைவருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், பலஸ்தீனிய நிலங்களை கைப்பற்றியுள்ளவர்களுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்காதிருப்பதற்கும் சர்வதேச சமூகம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
எம். ஷகீர் நவாஸ்
தலைவர் Cosmos UK