அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேச பாடசாலைகளில் மாணவர்களுக்கு அனர்த்த அபாய குறைப்பு மற்றும் சுனாமி அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.
பருவ கால பெயர்ச்சி மழை மற்றும் காலநிலை மாற்றத்தின் அடிப்படையில் இயற்கை அனர்த்தமானது சர்வ சாதாரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வருவதாகவும், அதன் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புக்கள் அதிகரித்த வண்ணமுள்ளது.
இச் சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு மக்களை இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பதற்கான அனர்த்த அபாய குறைப்புத் திட்டங்கள் மற்றும் அனர்த்த தயார்படுத்தல்களுக்கமைய பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து இளைஞர்களை வலுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ செயற்த்திட்டங்களான அனர்த்த அபாயக் குறைப்பு, அனர்த்த தயார்படுத்தல் நிவாரணம், புனர்வாழ்வு மற்றும் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வடிகான்களை துப்புரவு செய்தல் மற்றும் புனரமைப்புச் செய்தல், வாய்க்கால்களை துப்புரவு செய்தல், குளங்களை ஆழப்படுத்தல், புனரமைப்புச் செய்தல், கால்வாய்களில் உள்ள தடைகளை அகற்றுதல் வெள்ள நீர் வடிந்தோடும் பகுதியில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள காணிகள் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்தல், பொது மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)