ரயில்வே திணைக்களத்தில் பணிபுரியும் இந்திக்க தொடங்கொட என்பவர், அமைச்சர் பந்துல குணவர்தன தொடர்பில் வெளியிட்டுள்ள கூற்று தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தனவினால் மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையவே, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க மேற்படி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக் குழுவின் செயலாளர் கடித மூலம்
அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்தின் நிர்மாண ஒப்பந்தங்களின் போது அமைச்சர் பந்துல குணவர்தனவின, இந்திய நிறுவனத்திடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக ரயில்வே சாரதியாக பணிபுரியும் இந்திக்க தொடங்கொட ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை முன்வைத்திருந்தார்.
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அமைச்சர் நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொண்டார். இதையடுத்து நீதிமன்றம் இந்திக்க தொடங்கொடவுக்கு எதிராக அழைப்பாணையும் விடுத்திருந்தது.
லோரன்ஸ் செல்வநாயகம்