தேசிய,சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய பிரதேசமான பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான நுவரெலியா மாவட்டத்தின் உலக முடிவு பகுதியில், ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக அப்பகுதிக்கு பயணிக்கும் ஒரு பாதை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்படி உலக முடிவு பிரதேசம் ஹோடன் ப்ளேஸ் பகுதியில் அமைந்துள்ளது. அம்பேவெல, ரேந்தபொல பாதையே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கெப்பெட்டிப்பொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், அப்பாதையின் மூன்றாவது கிலோமீட்டர் பகுதியிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உலக முடிவு பிரதேசம் சுமார் 4000 அடி உயரம் கொண்ட பகுதியாகும். பெருமளவு சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த பகுதியில், நான்கு கிலோ மீற்றர் உ ள்ளே பயணித்தால் எழில் மிகுந்த பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.
உலக முடிவு பகுதியிலிருந்து பார்வையிடும் போது அங்கு இடம்பெறும் வானிலை மாற்றங்கள் பல வியப்புமிக்க காட்சிகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூடப்பட்டுள்ள பாதையின் புனரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, விரைவில் அந்த பாதை திறக்கப்படும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)