பெருந்தோட்ட தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக சம்பள நிர்ணய சபை நேற்று இரண்டாவது தடவையாகவும் கூடிய போதும் பெருந்தோட்ட நிறுவனங்கள் இச்சம்பள நிர்ணய சபையின் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. மூன்றாவது தடவையாகவும் கூட்டத்தை புறக்கணித்தால் நாட்டில் தொழில் சட்டத்துக்கமைய நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நேற்று சம்பள நிர்ணய சபை கூடிய போது, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தவர்களும் அதில் கலந்து கொண்டனர். ஆனால் நேற்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அவர்கள் மீண்டும் ஒருமுறை தோட்டத் தொழிலாளர்களையும் சம்பள நிர்ணய சபையையும் புறக்கணித்துள்ளமையையே காண்பித்துள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தோட்ட நிர்வாகத்தை புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு முறை கூடிய சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சம்மேளனம் வருகை தரவில்லை. மூன்றாம் முறையும் வருகை தராவிடின் நாட்டின் தொழில் சட்டத்துக்கமைய சம்பள நிர்ணய சபையில் ஆகக் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் எந்தத் தொகை நிர்ணயிக்கப்படுகின்றதோ அதனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனமாக உறுதி செய்து வர்த்தமானியில் வெளியிட தொழில் அமைச்சருக்கும் தொழில் ஆணையாளருக்கும் அதிகாரம் உள்ளது. பெருந்தோட்ட நிர்வாகங்களிடம் நாம் கையேந்தவில்லை உழைப்புக்கேற்ற ஊதியமே கேட்கின்றோம் என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினுடைய அடுத்த கட்ட நடவடிக்கை கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.