ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 75 வருட கால பாரம்பரியத்தைக் கொண்டது. எனவே அதன் பதில் தலைவராக தற்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை மிகச்சிறந்த ஜனநாயக செயற்பாடு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சி பல அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களை உருவாக்கிய கட்சி. அந்தவகையில் தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது ஆட்சிக்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தார். விவசாய மற்றும் பாமர மக்களைப் பெரிதும் மதித்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்பின்னர் எமது கட்சி தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட இன்று ஜனநாயக முறைப்படி பொருத்தமான ஒருவர் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பரந்துபட்ட ஆளுமை கொண்டவர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீதும்-அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன மீதும் அண்மைக் காலமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதில் தலைவர் பதவி அமையப்பெற்றுள்ளது. இது ஓர் திருப்பு முனையாகவே அமையும். அமைச்சர் விஜயதாச வடக்கு மக்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர். வடக்கு மக்களுடைய கலாசாரத்தை மதிக்கக்கூடிய ஒருவர் என மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சாவகச்சேரி விசேட நிருபர்