மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயவென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அண்மையில் கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மஹவ ரயில் நிலையம், கல்கமுவ ரயில் நிலையம், இலங்கையின் முதலாவது வனவிலங்கு சுரங்கப்பாதை நிர்மாணிக்கப்படும் கல்கமுவ, காசிகோட்டை – கெடதிவுல பிரதேசம், தலாவ ரயில் நிலையம் போன்ற பகுதிகளுக்கு அமைச்சர் பந்துல கள விஜயம் மேற்கொண்டு நிர்மாணப்பணிகளை அவதானித்தார்..
இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனமான இந்தியன் இர்கோன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பணிப்பாளர் (திட்ட ) ஏ.கே.சிங், இத்திட்டம் மற்றும் வனவிலங்கு சுரங்கப்பாதையின் சிறப்புக் கண்காணிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
அநுராதபுரம் ரயில் நிலைய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உதவி வர்த்தக அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் சுற்றுப்புற வளாக கண்காணிப்பில் ஈடுபட்ட அமைச்சர், தற்போது பயன்படுத்தப்படாத மற்றும் மூடப்பட்டிருக்கும் சில கட்டடங்கள் அநுராதபுரம் வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் அங்கு உணவு, சுகாதாரம் மற்றும் அன்னதான நடவடிக்கைகள் வழங்குவதற்கான திட்டத்தை தயார் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தில் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, சுரகிமு லங்கா அறக்கட்டளையின் தலைவர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர், இர்கோன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பிரதம பொது முகாமையாளர் குரு சட்வா, ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் ( போக்குவரத்து) என். ஜே. இந்திபோலகே மற்றும் பலர் இந்த விஜயத்தின் போது வருகை தந்திருந்தனர்.