பேருவளை, சீனன்கோட்டை பெருகமலை ஸாக்கிரீன் பள்ளிவாசலில் புனித ரமழான் மாதம் 29 நாட்களும் ஹிஸ்பு மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசளிக்கும் நிகழ்வொன்று இம்முறையும் இடம் பெற்றது.
பள்ளிவாசல் இமாம் மௌலவி எஸ்.எச்.எம். இம்ரான் (ஹுமைதி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 110 சிறார்கள் பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும் அக்ரம் பாரூக்கினால் பணப்பரிசும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல் உதவி பேஷ் இமாம் மௌலவி எம். லியாவுல் ஹக் (பாரி) உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸாக்கிரீன் மத்ரஸா நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், மத்ரஸா முஅல்லிம்கள் என பலரும் நிகழ்வில் பங்குபற்றினர்.
மாணவர்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகளாக இந்த ஹிஸ்பு மஜ்லிஸ் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் கீழ் உள்ள 17 பள்ளிவாசல்கள், ஸாவியாக்களில் புனித ரமழானில் ஹிஸ்பு மஜ்லிஸ் இடம் பெற்றதோடு பெருகமலை ஸாக்கிரீன் பள்ளிவாசலில் ஆகக் கூடுதலான சிறுவர்கள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மத்ரஸாக்களில் கல்வி பயிலும் சிறார்கள் புனித அல்குர்ஆனை பிழையின்றி ஓதுவதற்கு இப்படியான ஹிஸ்பு மஜ்லிஸ்கள் வழிவகுக்கிறது என்றும் இதில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களை பெற்றுக் கொடுத்த பரோபகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மௌலவி எஸ்.எச்.எம்.இம்ரான் (ஹுமைதி) இங்கு உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
பேருவளை விசேட நிருபர்