இந்திய – உஸ்பெகிஸ்தான் கூட்டு முயற்சியில் உஸ்பெகிஸ்தான் ஆயுதப்படைகள் அகடமியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய உயர் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் உஸ்பெகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி, இந்த ஆய்வு கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்டுள்ளார். அத்தோடு, ‘எங்களுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் ஒருபடியே இவ்வாய்வுகூடம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 இல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் போது இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய ரூ 8.5 கோடி செலவில் இவ்வாய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு விரிவுரை மண்டபங்கள், அதிநவீன சைபர் பாதுகாப்பு கூடம், ஹார்ட்வேர் புரோகிராமிங் கூடம், வெப் புரோகிராமிங் கூடம், சேவர் அறை உள்ளிட்ட ஒன்பது அறைகளை உள்ளடக்கி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் இவ்வாய்வுகூடம் மேலும் பல நவீன தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் பாலமாக விளங்கும் இந்த ஆய்வுகூடம் எங்களுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.