உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகிறது.பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, உலக பரப்பில் மிக உயரத்தில் இந்தியா மதிக்கப்படுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.ம.ச மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தே.ம.ச தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கும் குறியிடப்பட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
543 தொகுதிகள், 28 மாநிலங்கள், 08 ஒன்றிய பிரதேசங்கள் ஆகியனவற்றை ஊடுருவி சுமார் 97 கோடி வாக்காளர்கள் இதில் வாக்களிக்கவுள்ளனர். 2,600 கட்சிகளின் வேட்பாளர்களை கொண்ட உலகின் மிக பிரமாண்ட ஜனநாயக தேர்தல் நடவடிக்கையின் மூலம், ஆறு வாரங்களில் ஏழு கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பல கட்சி ஜனநாயக இந்திய ஒன்றியம் என்ற இந்திய அரசாங்கம் தெரிவு செய்யப்படும். இலங்கை பிரஜை என்ற பெருமையுடனும், மறைக்கப்பட முடியாத இந்திய வம்சாவளி பின்னணியுடனும், இந்திய நாட்டு தேர்தல்களை கணிக்கின்ற இலங்கையின் ஒரு ஜனநாயக கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய தேர்தல் பிரசாரத்தில் என் மனதை வெகுவாக கவர்ந்த சுலோகம் ஒன்று உண்டு. அது, “நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றீர்கள் என்பதற்கு நேரம் எடுத்து சிந்தியுங்கள்! சரியாக சிந்தித்து உங்கள் சரியான எம்பியை தெரிவு செய்யுங்கள் என்ற சுலோகமாகும்.