இலங்கை நூலக சங்கத்தின் 18ஆவது தேசிய ஆய்வு மாநாடு முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் பீடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
‘நூலகங்கள் மற்றும் சமூகத்தின் இணைப்பு, சமூகத்தின் மூலம் பிணைப்பினை வலுப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாநாடு நடைபெறுவதுடன், விசேடமாக இலங்கையில் மும்மொழிகளிலும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி முஹம்மட் மஸ்றூபா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம அதிதியாக அப்பல்கலைக்கழக பதில் உபவேந்தரும் கலை, கலாசாரபீட பீடாதிபதியுமான பேராசிரியர் எம்.எம்.பாஸில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஆய்வு மாநாட்டின் முதன்மை பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழக நூலகர் ஆர்.மகேஸ்வரன் உரையாற்றினார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், கிழக்கு பல்கலைக்கழக நூலகர் கலாநிதி டபிள்யூ.ஜே.ஜெயராஜ், தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட தலைவர் யு.எல்.அப்துல் மஜீத், இலங்கை நூலக சங்கத் தலைவர் பிருத்தி லியனகே, யாழ். பல்கலைக்கழக பதில் நூலகர் கலாநிதி கே.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மாநாட்டு மலரும் வழங்கி வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை விசேட நிருபர்