காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி மிகவும் உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சம்பவம் நோர்ட்டன் பிரிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் நேற்று (18) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹட்டன் கல்வி வலயத்தில் நோர்வூட் பகதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் என்றும், குறித்த மாணவன் 319 கே.லெதன்டி கிராம சேவகர் பிரிவில் லெதன்டி கிராமத்தில் வசித்துவந்த டயஸ் பர்னாண்டோ கிளின்டன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர் குடும்ப உறவினர்களுடன் நீராடச் சென்ற வேளையிலேயே குறித்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வழமையாக நீர்த்தேக்கத்தில் நீந்தும் அனுபவம் உள்ளவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
குறித்த மாணவன் நீந்தி நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென மாயமாகியுள்ளார். அதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் சடலமாக மீட்க்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மை காலமாக ஆபத்தான இடங்களில் நீராடச் சென்று உயிரிழக்கும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பிள்ளைகள் பற்றிய அக்கறை இதை விட கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற நிலையினை இவ்வாறான சம்பவங்கள் எடுத்து காட்டுவதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமே.
மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்