கைதான நடிகை தமிதா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், நேற்று கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (05) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இருவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நடிகையும் அவரது கணவரும் நேற்று (04) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர்.
தமிதா அபேரத்னவும் அவரது கணவரும், கடந்த 27ஆம் திகதி தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.
பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தமிதா அபேரத்னவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பல தடவைகள் சென்ற போதும் அவர் வீட்டில் இருந்திருக்கவில்லை.
இந்த நிலையில், இருவரையும் கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை சந்தேகநபர்களாக பெயரிடுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, அவர்களுக்கு பயணத் தடை விதிக்குமாறும் கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.