கொழும்பு, கோட்டை முதல் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கிடையில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு வேலை காரணமாக ரயில் சேவைகளில் சற்றுத் தாமதம் ஏற்படலாமென, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கிடையிலான கரையோர ரயில் சேவை ஒரு வழித்தட சேவையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாளை (31) வரை இந்த நிலைமை நீடிக்குமெனவும், திணைக்களம் தெரிவித்தது.
மேற்படி ரயில் நிலையங்களுக்கிடையிலான பராமரிப்பு வேலை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சில ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படலாமெனவும், ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
ஆயினும், நாளை ஞாயிற்றுக்கிழமை இரவுக்கு பின்னர் கொழும்பு, கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்புமெனவும், ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.