பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 1–2 என இழந்தது.
இதில் இலங்கை சார்பில் ஜனித் லியனகே பெற்ற கன்னி ஒருநாள் சதம் வீணானதோடு காயத்துக்கு பதில் மாற்று வீரராக துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் இளம் வீரர் தன்சீத் தமீம் அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.
சட்டக்ராமில் பகல் ஆட்டமாக நேற்று (18) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி ஆரம்பத்திலேயே மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் சவாலான இலக்கொன்றை நிர்ணயிக்க முடியாமல் போனது.
மத்திய வரிசையில் வந்த லியனகே கடைசி வரை நின்று பிடித்து ஆடி 102 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றார். எனினும் வேறு எந்த வீரரும் 37 ஓட்டங்களை தாண்டவில்லை.
முதல் இரு விக்கெட்டுகளையும் 12 ஓட்டங்களுக்கு பறிகொடுத்த இலங்கை கடைசிவரை முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களையே பெற்றது.
பங்களாதேஷ் சார்பில் பந்துவீச்சில் தக்சின் அஹமட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டுகளை பதம்பாத்தனர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை லஹிரு குமாரவால் சாய்க்க முடிந்தது. பங்களாதேஷ் அணி 113 ஓட்டங்களில் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்தபோதும் உபாதையால் போட்டியின் நடுவில் விலகிய சௌம்யா சார்கருக்கு பதில் மாற்று வீரராக ஆரம்ப துடுப்பாட்ட வரிசையில் வந்த தன்சீத் தமீம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷ் அணியின் வெற்றியை நெருங்கச் செய்தார். 81 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 9 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய லஹிரு குமார 8 ஓவர்களில் 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பாத்தார்.
அடுத்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி சில்ஹட்டில் ஆரம்பமாகவுள்ளது.