எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பூஜ்ஜியத்திலிருந்து 4 சதவீதம் வரையான மீவுத் தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில், விலை சூத்திரத்தை செயல்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பெற்ரோலிய கூட்டுத்தாபனம், LIOC மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த நான்கு வீதத்தை பயன்படுத்த முயற்சிக்கிறோம்.
கடந்த ஆண்டின் விலைச்சூத்திரத்தின் ஊடாக பழைய கடன்களையும், வங்கிகளில் வாங்கிய கடன்களையும் செலுத்த முடிந்தது.
இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம்.
தற்போது, அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி அறிவித்தல் அமைச்சினால் வெளியிடப்படுகிறது.
இதன்படி, இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் LIOC பெரும்பாலும் இந்த அதிகபட்ச விலைக்கு விற்கக்கூடும். சினோபெக் மட்டும் அதை விட குறைவாக விற்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.