மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாதென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரத்தை மீளப்பெறுவதற்காக உதய கம்பன்பிலவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்துக்கான தனிநபர் பிரேரணை தொடர்பாக,
கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்க வைக்கப்பட வேண்டும்.
இதிலும் பார்க்க மேலதிக அதிகாரங்களை பெற்றுகொள்ளும் வகையிலும் ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக உறுதியுடன் செயற்பட்டு வருகிறது.
எனினும், அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில,தனி நபர் பிரே ரணையை சமர்ப்பித்துள்ளார். இது பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், அதிகப் படிமுறைகளை தாண்டி வரவேண்டியுள்ளது. தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே நான்,கருதுகிறேன்.
ஒருவேளை, இந்த முயற்சி தொடர்ந்தும் முன்னகருமாக இருந்தால், நாம் உருவாக்கி வைத்துள்ள தேசிய நல்லிணக்கத்தை பயன்படுத்தி, அதனை தடுப்பதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.