மறைந்த மனிதநேயக் கலைஞர் விஜயகுமாரதுங்கவின் 36 ஆவது நினைவு தினம், நாளை பிற்பகல் கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தேசிய மக்கள் சகோதரத்துவ மன்றத்தின் முக்கியஸ்தர் மாதம்பாகம அஸ்ஸஜி தேரர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அமரர் விஜயகுமாரதுங்க மற்றும் புவக்தரமுல்லே பேமாலோக தேரர் உள்ளிட்ட மரணமடைந்துள்ள நூற்றுக்கு அதிகமானோரை நினைவுகூர்ந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
அங்கு மேலும் தெரிவித்த அஸ்ஸஜி தேரர் :
இலங்கை -இந்திய ஒப்பந்தத்திற்கு சிறிலங்கா மக்கள் கட்சி ஆதரவு அளித்தமையை காரணமாக வைத்து விஜயகுமாரதுங்க படுகொலை செய்யப்பட்டார்.
அமரர் விஜயகுமாரதுங்கவின் அரசியல் நோக்கு இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமான பெறுமதியான நோக்காகும்.
அதற்கிணங்க அவர் முன்னெடுத்த சேவைகளை தொடர்ந்தும் சமூக மயப்படுத்துவதற்காகவே இந்த நினைவு தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)