இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் சத்ரான் தொடர்ந்து தலைவராக செயற்படவிருப்பதோடு, முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தொடர்ந்தும் காயத்தில் இருந்து மீண்டு வருவதால் அணியில் இடம்பெறத் தவறியுள்ளார். இதில் மற்றொரு பின்னடைவாக உபாதைக்கு உள்ளாகி இருக்கும் முஜீபுர் ரஹ்மானும் டி20 அணியில் இடம்பெறவில்லை.
“எமது இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு நாம் செயற்படுகிறோம்” என்று அணித் தேர்வு குறித்து ஆப்கான் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி நசீப் கான் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆப்கான் அணி ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் தொடர்களில் ஆடிய பின்னர் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆடவுள்ளது. இதற்கான ஆப்கான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி தம்புள்ளையில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகள் இதே மைதானத்தில் பெப்ரவரி 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறும்.
ஆப்கான் குழாம்: இப்ராஹிம் சத்ரான் (தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (வி.கா.), முஹமது இஷாக் ரஹிம் (வி.கா.), ஹஸ்ரதுல்லா சசாய், குல்பதின் நயிப், முஹமது நபி, நஜிபுல்லா சத்ரான், அஸ்மதுல்லா ஒமர்சாய், கரிம் ஜனத், ஷராபுத்தீன் அஷ்ரப், பஸால் ஹக் பாரூக், பரீத் அஹமட், நவீன் உல் ஹக், நூர் அஹமட், வபாதர் முஹமது மற்றும் கைஸ் அஹமது.