தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (10) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் ஆரம்பமானது.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விசேட பேச்சாளராக அமெரிக்க- இலங்கை புல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டு உரையாற்றினார்.
முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும், மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைதுறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எல்.ஏ. காதர் விருதை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக் கொண்டார்.
தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை முஹம்மட் அலி றீஷா நூர் பெற்றுக் கொண்டார்.
ஹிந்து கலாச்சார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி ஞாபகார்த்த விருது நூறுல் ஸிபா ஜாபீறுக்கு வழங்கப்பட்டது.
இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செயினுல் ஆப்தீன் சாஜித் பெற்றுக்கொண்டார்.
மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவின் மூன்றாவது அமர்வில் விசேட பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஒலுவில் விசேட, பாலமுனை தினகரன் நிருபர்கள்