முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நேற்று (6) காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் துறைசார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை விடுவித்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் நந்திக்கடல், கொக்கிளாய், நாயாறு, சுண்டிக்குளம் ஆகிய இடங்களிலும் மக்கள் பாவனைக்கு காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்தி செயலணியின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன், வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.சமந்தி, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சி. குணபாலன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், காணிக்கிளை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)