பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு சில ஊடகங்களில் பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இதனால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 22ஆம் திகதி தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் பெலியத்த பகுதியில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சூத்திரதாரியாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபராகவும் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் செயற்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆயினும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் இருந்து இந்த கொலையை முழுமையாக திட்டமிட்டு செய்தவர் அல்லது சூத்திரதாரியாக செயற்பட்டவர் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு சில ஊடகங்களில் வெளியிடப்படும் இவ்வாறான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தாத தகவல் என அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவதால் விசாரணைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் 39 வயதான மனைவி மற்றும் 72 வயதான தந்தை ஆகியோர் நேற்றுமுன்தினம் (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் நேற்றையதினம் (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.