மார்ச் முதல் நடைமுறையாகிறது சர்வதேச மொழிகளிலும் கவனம்
நாட்டிலுள்ள பாடசாலைகளில் முதலாம் தரம் முதல் தரம் ஐந்து வரை கல்விகற்கும்16 இலட்சம் மாணவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் பகல் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இத்திட்டத்துக்காக 16 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்கிணங்க நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கான பகலுணவுச்செலவு 110 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலைகளில் சர்வதேச மொழிகளைக் கற்பிப்பதற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 162 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், 2024ஆம் ஆண்டுக்கான பாடசாலை இலவச பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
அந்த வகையில் பாடசாலைகள் ஆரம்பமானதும் மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன் இலவச பாடப் புத்தகம் மற்றும் இலவச பாடசாலை சீருடைத் துணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
சர்வதேச மொழிகளை கற்பது தொடர்பில் தற்போது மாணவர்கள் மத்தியில் மிக அதிகமான கேள்விகள் காணப்படுகின்றன. இதனை கவனத்தில் கொண்டு தற்போது பாடசாலைக் கட்டமைப்பில் இடம்பெறும் சர்வதேச மொழிகளைக் கற்பிக்கும்
பாடசாலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் புதிய வெளிநாட்டு மொழிகளை அறிமுகப்படுத்துவத ற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரான்ஸ், ஜப்பான், சீனா, கொரியா, இந்தி, ஜேர்மன் போன்ற மொழிகளை கற்பிப்பதற்காக அரசாங்கப் பாடசாலைகளில் பொருத்தமான பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
இதனடிப்படையிலேயே நியமனக் கடிதங்கள் வழங்கப்படுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்