பொருளாதார இடர்களுக்கு மத்தியில் பிள்ளைகளின் கல்விக்காக கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்படும் வருமானம் குறைந்த மூவினத்தையும் சேர்ந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்களை அண்மையில் இளம் மாதர் முஸ்லிம் சங்கம் வழங்கியுள்ளது.
இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘பெக்டூ ஸ்கூல் 2024’ திட்டத்தின் கீழ் வருமானம் குறைந்த மூவினத்தையும் சேர்ந்த குடும்பங்ககளில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 75 பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்களும் பாடசாலைப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டன. அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கம் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் இளம் மாதர் சங்கத்தின் தலைவி தேசமான்ய பவாஸா தாஹா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கனடாவில் வசிக்கும் இலங்கையரும் கனடா இலங்கை முஸ்லிம் மாதர் சங்கத்தின் தலைவியுமான திருமதி ஸீனியா தாசிம் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக கிரேண்ட்பாஸ் லங்காராமய விஹாரையின் பிரதம விஹாராதிபதி மதுரட்ட தம்மாலங்கார தேரர் மற்றும் சம்மேளனத்தின் ஆலோசகர் காலித் பாறுக் உட்பட மாதர் அமைப்பின் உறுப்பினர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கொழும்பு தினகரன் நிருபர்