ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் பிரபல மோனாலிசா ஓவியத்தின் மீது இரு பெண் ஆர்வலர்கள் சூப்பைத் தெளித்துள்ளனர். ஆனால் ஓவியம், குண்டு கூடப் புக முடியாத கனத்த கண்ணாடிச் சட்டத்தால் மூடப்பட்டிருப்பதால் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மோனாலிசா ஓவியம் உலகின் மிகச் சிறந்த ஓவியங்களுள் ஒன்றாகும்.
அந்தச் சம்பவம் பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் (28) நடந்தது.
“எது முக்கியம்? கலையா? ஆரோக்கியமான, நிலைத்தன்மையுடன் உணவுப் பொருட்களை உண்பதற்கான உரிமையா?” என்று இரு பெண்களும் ஓவியத்துக்கு முன் நின்று கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது. பிரான்ஸ் விவசாயிகள் வேலையிடத்தில் உயிரிழப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பிரான்ஸ் விவசாயிகள் கூடுதல் சம்பளம், வரிக்கழிவு கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விதிமுறைகளைத் தளர்த்தும்படியும் அவர்கள் கோருகின்றனர்.
அதை எதிரொலிக்கப் பெண்கள் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.