பிறிதொருவரின் குணம், செயல், இயல்பு ஆகிவைகளை அறிந்து கொண்டு, அதன் மூலம் அவன் பெறுகின்ற பலன்கள். விளைவுகளை அறிந்து கொண்டால், அதுவே நமக்கு அனுபவ பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். நற்செயல்களால் மேலோங்கி வளர்பவர்களை, சமுதாயத்தில் நற்பெயர் பெற்ற சான்றோர்களின் வாழ்வை வழிக்காட்டும் பாடமாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதே போல் மனிதன் ஒருவன் தனது நடை, உடை, பாவனை, நடத்தை. குணம் செயல் ஆகியவைகளால் உருவாகும் நற்பலன்களின் மூலமும் அனுபவ பாடம் கற்றுக் கொள்ள முடியும். தன்னை சீர்த்திருத்திக் கொண்டு பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வழியில் நடந்து ஒருவன் நற்கதி பெற வேண்டும். அதாவது நற்சேர்க்கை, சுய ஆய்வு, சிந்தனை, அனுபவம் ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு நல்லறிவு பெற வேண்டும். இம் முயற்சியை தொடர்ந்து செய்திட வேண்டும்.
ஞானமில்லாத வாழ்வு பொருளற்றது. அறியாமையானது இம்மை (உலக வாழ்க்கை) மற்றும் மறுமை (ஆன்மீக வாழ்க்கை) ஆகியவற்றை நாசமாக்கி விடும். எனவே அறியாமை இருளிலிருந்து விலகி, ஞான தீபத்தின் ஒளியை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்க வேண்டும். தனது சோம்பலையும் கவனமின்மையையும் நீக்கி விட்டால் தன்னுடைய பலவீனம் அகன்று விடும் என்பதை மனிதன் உணர வேண்டும். பின்னர் அவன் வாழ்வு சிறப்புற்று விளங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மனிதன் தனக்குத் தானே ஒரு முழுமையான மூலக்கூறு ஆவான். அவனுக்குள்ளேயே அனைத்து சக்திகளும், பிறந்ததிலிருந்தே உள்ளன. அந்த சக்தியை ஆதாரமாகக் கொண்டு, எந்த நிலையிலும் நாம் முழுமையான வெற்றியின் சிகரத்தை தொட்டுவிட முடியும்.
மனிதனுடைய உள்ளத்தின் விழிப்புணர்வே, அனைத்து தெய்வங்களின் பிரதிநிதியாகும். உந்தன் சக்தி உன் உள்ளத்தில் உறங்கி கிடக்கும் வரை, அதற்கு எவ்வித மதிப்பும் இருக்காது. அந்த சக்தி விழித்துக் கொள்ளும் போது, நம்மை சுற்றி நாலாபுறமும் அதிசய ஞான ஒளி பிரகாசிக்கும்.
நம் நற்குணங்களோ அல்லது தீயகுணங்களோ தான், நாம் பெற்றிருக்கும் உன்னத நிலை அல்லது அவலநிலைக்கு காரணம் ஆகும். வெளிப்புற லாப-நட்டங்கள், உதவி – இடைஞ்சல்கள் இவை யாவும் நம்மை உயர்த்துவதில்லை அல்லது தாழ்த்துவதில்லை. நம் உயர்வுக்கும் தாழ்வுக்கும் நாமே பொறுப்பு. எவன் தன்னை உணர்ந்து, தன் குறைகளை களைந்து நேர்மறை சிந்தனையுடன் செயல்படுகிறானோ அவன் வெற்றிக் கோட்டைக்கு மிக அருகில் இருக்கிறான். எவன் ஒருவன் தனது உள்ளாற்றலை புரிந்து கொண்டு அதனை தட்டி எழுப்புகிறானோ அவனிடம் அபரிதமான தெய்வசக்தி மிகுந்து காணப்படும்.