Monday, April 29, 2024
Home » ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தி; நிர்மாணித்த கட்டடம் 2 வருடங்களாக பயன்படுத்தவில்லை

ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தி; நிர்மாணித்த கட்டடம் 2 வருடங்களாக பயன்படுத்தவில்லை

- துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

by Rizwan Segu Mohideen
January 29, 2024 6:22 pm 0 comment

ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தப்படாமை தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, அத்தகைய திட்டங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் (12) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் இதற்கு முன்னர் கருத்திற்கொள்ளப்பட்ட, நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட “சியத உயன” திட்டம், வெலிக்கடை சிறைச்சாலை திட்டம், ஹட்டன் புகையிரத நிலைய அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை, அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களம், இலங்கை புகையிரதத் திணைக்களம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெடகொட, (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT