கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ஆம், 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், திருவிழாவுக்கு தமிழகத்திலிருந்து 3 ஆயிரம் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்தாா்.
இது தொடர்பாக இராமேஸ்வரம் பங்குத்தந்தை சந்தியாகு ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த போது,
“இந்தியா மற்றும் இலங்கை பக்தர்கள் ஒன்றிணைந்து கலந்துகொள்ளும் திருவிழா கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவாகும். இந்தத் திருவிழாவில் தமிழகத்திலிருந்து பக்தர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று யாழ்பாணத்திலுள்ள மறைமாவட்ட ஆயர் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளாா். இது தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டு 75 விசைப் படகுகளில் 3 ஆயிரம் பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.
இதற்கான பயணக் கட்டமாக ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாவை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கான விண்ணப்பப்படிவம் 6ஆம் திகதிவரை வழங்கப்படும். அதன் பின்னர் விண்ணப்பப்படிவம் வழங்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்தார்.